http://puthu.thinnai.com/?p=12953
முள்வெளி அத்தியாயம் -16
சத்யானந்தன்
தலைமையாசிரியை அறையில் (எதிரில்) சாந்தா டீச்சர் பொறுமையாக அமர்ந்திருந்தாள். தலைமை அப்போது இணைய தளத்தில் எதையோ அலசிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து இந்த அம்மாள் எதிரே யாரும் காத்திருக்காமல் தனியாக இருக்கும் போது ஏதாவது செய்வாரா இல்லை வெத்து பந்தாவுக்காக மட்டுந்தானா இதெல்லாம் என்று வேவு பார்க்க வேண்டும்.
சாந்தா தன் மொபைலில் தேவையற்ற குறுஞ்செய்திகளை நீக்க ஆரம்பித்தாள். “யெஸ்” என்றதும் “மேம் … டிவி ஸீரியல்ல வர்ற ‘குழலூதி மனமெல்லாம் ஸாங்குக்கு கிருஷ்ணர் வேஷம் போட ஒரு ஸ்டூடன்டை செலக்ட் பண்ணியிருக்கேன்…”
“டீச்சர்ஸ் சில்ரன் யாரும் வேண்டாம்”, என்றார் தலை.
” நோட்டட் மேம்.. அப்புறம் ‘தத்து’ ன்னு ஒரு தமிழ் ஷார்ட் ஸ்டோரி கொடுத்துப் படிக்கச் சொன்னீங்க…”
“படிச்சாச்சா?”
“இல்ல மேடம்.. எனக்கு அவ்வளவா தமிழ் வராது..”
” ஓகே. லீவ் இட் .. அந்த மேனுஸ்கிர்ப்டை எங்கிட்ட கொடுங்க…” பந்தாவாக திருப்பி வாங்கிக் கொண்ட தலைமை ஆசிரியைக்கு இரவு தான் படிக்க நேரம் கிடைத்தது.
**__
**__**
** மதியம் மணி ஒன்று. தியாகராசன் ‘தியாகராஜனா’க இருக்கும் போதே குருநாதன் . தியாகராசன் வீட்டுக்கு வந்திருக்கிறான். அப்போது குருநாதன் எட்டாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தான். ஜாதி சங்கக் கூட்டங்களில் குருநாதன் தமிழில் அழகாகப் பேசுவான் என்பதாக அவனை அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். அப்போது தியாகராசன் வீடு இதே இடத்தில் இன்னும் சிறியதாக் ஒரே ஒரு மாடியும், ‘க்ரில் கேட்’ கதவும் திண்ணையுமாக இருந்தது. வீட்டுக்குப் பின்னே ஒரு வாழையும் முன் பக்கம் ஒரு எலுமிச்சை, ஒரு முருங்கை, ஒரு மல்லிகைக் கொடி இவைகள் தான் இருந்தன. இப்போது அழகான ‘க்ரோட்டன்ஸ்’, நிறைய தொட்டிச் செடிகள், புல் தரை என வீட்டில் முன் பக்கம் பெரிய தோட்டம், பெரிய இரும்பு கேட், காவலாளி, நாய்கள். முன்பு அவரது முழுக்குடும்பமும் இருந்த கீழ்த்தளத்தில் இப்போது மிகப் பெரிய ஹால் வரவேற்பறையாகவும் அதைச் சுற்றி இரண்டு மூன்று உதவியாளர்களின் அறைகளும் அவரது பெரிய அலுவலக அறையும் இருந்தன. கட்சி தலைவரின் மிகப் பெரிய படம் ஹாலின் முடிவில் இருந்த சுவரை அடைத்திருந்தது. கட்சித் தலைவர் மற்றும் கூட்டணித் தலைவர் ஆகியோருடன் ராசேந்திரன் எடுத்துக் கொண்ட புகைப் படங்கள் சுவரின் பல இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. சுவர்க்கடிகாரம் மணி ஒன்று என்றாலும் குளிர் சாதனம் பகலின் உஷ்ணத்தை விழுங்கியது. தன் பெயரை ஒரு தாளில் உதவியாளரிடம் அவன் கொடுத்து அரை மணிக்கு மேலாகியிருந்தது. அவனுக்கு முன்னால் வந்த யாரும் இன்னும் உள்ளே போகவில்லை. தேநீர் வந்தது. காத்திருந்த பலரும் செல் போன் அதித்ததும் வெளியே போய் அங்கே இருந்த நிசப்தம் பாதிக்கப் படாது பார்த்துக் கொண்டார்கள்.
எங்கேயும் காத்திருப்பது குருவுக்கு சிரமமானதே இல்லை. தனியே காத்திருக்கும் போது எதையேனும் சிறிது நேரமாவது அசை போட வாய்க்கிறது. கூட யாராவது பதட்டமும் பரிதவிப்புமாக காத்திருக்கும் போது ஒரு நல்ல உள்ளாழும் அனுபவம் தட்டிப் பறிக்கப் பட்டு விடுகிறது. இன்று வெகுநாள் கழித்து ஒரு காத்திருத்தல். மர நிழல் மாதிரி ஒரு தனிமை.
இந்த சந்திப்பில் அவனுக்குப் பிடித்திருந்தது அப்பா அவனை எதற்காக அனுப்புகிறேன் என்று சொல்லாமல் அனுப்பி வைத்தது தான். ஒரு முறை ஒரு உறவினர் வீட்டுக்கு அவர் பெண் பூப்பெய்தியதற்கு ஒரு புடவையைப் பரிசாகக் கொடுத்து வரச் சொன்னார். அவர்கள் விழுந்து விழுந்து உபசரிக்க அந்தப் பெண்ணும் அறை சன்னல் வழியாக எட்டிப் பார்க்க அவனுக்கு ஒரு மாதிரி அப்பாவின் உள் நோக்கம் புரிந்தது. ஆனால் சில மாதங்களில் அப்பா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.
ஹை ஸ்கூலில் படிக்கும் போது அம்மா அண்ணன் அக்கா யாருமில்லாமல் தனியே அவனை சித்தி வீட்டுக்கு அனுப்பிய போதும் சித்தியும் சித்தப்பாவும் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள். நிறைய புதுத் துணி மணிகள், அவனையொத்த பையன்களுடன் சினிமா, வீட்டில் விருந்து சாப்பாடு, ஹோட்டலிலிருந்து ஐஸ் க்ரீம், என்று ஒரே அமர்க்களம். அதற்குப் பிறகு சித்தியும் சித்தப்பாவும் அடிக்கடி வந்து போக இருந்தார்கள். அவனுடைய தலையை சித்தி கோதிக் கொடுத்தாலும் அவன் வெட்கத்தில் நெளிவான்.
ஒரு நாள் அவன் தூங்கி விட்டதாக நினைத்து “ஜோஸியர் இப்படிக் கெடுத்திருக்க வேண்டாம்” என்று பேச ஆரம்பித்த போது காதைத் தீட்டிக் கொண்டான். சித்தப்பாவுக்கு அவனைத் தத்தெடுப்பதால் சில பெரிய ச்ங்கடங்கள் உண்டாகும் என்றாராம் ஜோஸியர். பிறகு அவர் பொருத்தமான ஒரு சொந்தக்காரப் பையனைத் தத்தெடுத்தார். இன்றுவரை நூற்றுக்கணக்கான முறை பதில் தெரியாமலேயே ஒரே கேள்வி அவன் மனதில் நிழலாடி மறைகிறது. சித்தி வீட்டு வசதியும் சொத்தும் தனக்குக் கிடைத்தால் போதும் என்றா அப்பா அம்மா முடிவு செய்திருப்பார்கள்? தாரை வார்த்துக் கொடுக்க அம்மாவால் கூடவா முடிந்திருக்கும்? இல்லை அப்பாவின் ஜோஸியர் இவனைத் தள்ளி விடுவது தான் உமக்கு நல்லது என்று சொல்லியிருப்பாரா?
அதற்குப் பிறகு அப்பா அம்மாவின் மௌனங்களையோ அல்லது பேச்சையோ உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். பெற்றவர்களின் பாசம் அவ்வளவு தானா? ரத்த சம்பந்தத்தைத் தாரை வார்க்கும் தண்ணீர் கழுவித் துடைத்து விடுமா? அம்மா என்று – என்னதான் அம்மாவின் சகோதரி என்றாலும் – சித்தியை அழைக்க முடியுமா? தாய் தந்தையரை இழந்தவன் அனாதை. தாய் தந்தையாரால் இழக்கப்பட இருந்தவன் (அவர்கள் முன்வந்து இழக்கத் தயாராயிருந்த காரணத்தால்) அனாதை ஆகாதவன் அவ்வளவு தானே? ஒரு கணம் கண்ணில் நீர் துளிர்த்தது.
“ஸார்… ஒரு நிமிஷம் உள்ளே வாங்க” உதவியாளர் வந்து தனது அறைக்குள் அழைத்துப் போனார். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கம்ப்யூட்டரும் சில நாற்காலிகளுமாயிருந்தது.
“தலைவர் ரொம்ப பிஸியாயிருக்காரு. நீங்க காலேஜுல பேச்சுப் போட்டியில எல்லாம் நிறைய பிரைஸ் வாங்கி இருக்கீங்கன்னு அப்பா சொன்னாரு. கட்சி மீட்டிங் வரும் போது நம்ப ஜாதியிலே சுதந்திரப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம்னு தியாகம் பண்ணினவங்க வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லி, பாரதி, பாரதி தாசன் பாட்டையும் சேத்து நீங்க பேசணும். ஒண்ணு ரெண்டு ஸ்கிரிப்ட் தயார் பண்ணுங்க. ஏதேனும் ஹெல்ப் வேணும்னாலும் நானும் செய்வேன்.” “ஓகே” என்று தலையசைத்து விடை பெற்றான் குருநாதன். ஒரு வேளை தத்துக் கொடுக்கப் பட்டிருந்தால் இந்த “சக்கர வியூக”த்தைத் தவிர்த்திருக்க இயலுமோ?
**__
**__**
** இரவில் லதாவை உரிமையுடன் அழைக்கும் தோழிகளில் தலைமையாசிரியையும் ஒருவர். அவர் பாட்டுக்கு தான் வாசித்த கதையைப் பற்றி விஸ்தாரமாக லதாவிடம் பேசத் துவங்க, லதா அந்தத் தொகுப்பில் பல கதைகளைப் படிக்கவில்லை என்பதால் ஏதோ சமாளித்துப் பேசினாள். ராஜேந்திரனின் நினைவும் சரளமாகப் பேச இயலாது குறுக்கிட்டது. இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் ராஜேந்திரன். காற்றில் விரல்களால் துழாவிக் கொண்டிருப்பானோ?
**__
**__**
**
வண்ணத்துப் பூச்சிகள்
மட்டுமல்ல
பிணந்தின்னிக் கழுகுகளின்
சிறகுகளும்
படபடக்கும் வனவெளியில்
வனத்தின் ஸ்பரிசத்தில்
சல்லிவேரின் ஈரம்
பாலைவனத்தின் விரகம்
வருட
சிலிர்த்திருக்கும் இலைப் பசுமை
வனம் அணிந்த
நீரோடை
நிலம் புகும்
வயற்காட்டுத்
தவளை சுவாசத்தில்
வனத்தின் நீட்சியிருக்கும்
கடற்கரையில் காயும்
மீன் வலைக்கு
வசப்படாத பின்னல்
சிலந்தி வலையாய்
விரியும்
குதிரைக் குளம்புகளில்
தெறித்துக் கிளம்பிய
புழுதி
கோபுர பொம்மைகளின்
வண்ணங்களை
மறைத்துப் படியும்
அத்தியாயம் -17
மதியம் மணி இரண்டு. கிருட்டினன் கவிதையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். எதிரில் அமர்ந்திருந்த கவிஞனான அவனுக்குத் தன் படைப்புகளை யாரும் தன் எதிரில் படிப்பது வரவேற்கத் தக்கதல்ல. தனது அருகாமையின் கட்டாயத்தால் தான் அவர்கள் படிக்கிற மாதிரி ஒரு தோற்றம் வந்து விடுகிறது. கண்படாமல் மேம்போக்காகப் படித்து விட்டுப் பிறகு ‘நன்றாக இருக்கிறது’ என்னும் வெற்று இரு வார்த்தைகளால் உற்சாக கர்வத்தைத் தகர்ப்பதே தேவலாம்.
கிருட்டினன் தமது வீட்டு வரவேற்பறையில் நடத்தும் இலக்கிய அமர்வுகளில் கவனம் பெறுமளவு அவன் இன்னும் சோபிக்கவில்லை. கிருட்டினன் நடத்தும் சிறு பத்திரிக்கையில் அவன் கவிதை வெளி வந்த போது பஸ் பிடித்துப் போய் பார்த்து நன்றி தெரிவித்தான். ஆனால் அவனது அடுத்த மூன்று நான்கு கவிதைகளை அவர் பிரசுரிக்கவில்லை. அவர் விமர்சித்த விதம் ஓரளவு தன்னை சுய விமர்சனம் செய்து, தனது படைப்புகளை செம்மைப் படுத்த அவனுக்கு உதவியது.
கிருட்டினன் படித்து முடித்து விட்டு “அனேகமா இதையும் நான் வெளியிட மாட்டேன்” என்றார்.
“தேறலைங்களா?”
“இல்லே. நல்லா வந்திருக்கு கவிதை. கூர்மையானது. குறி தவறாம பாய வேண்டிய இடத்தில பாயும்”. பிறகு என்னவாம்? ஓரிரு நொடி இடைவெளிக்குப் பின் “களத்துல இறங்கற வலிமையும், உங்களுக்காகப் பேசற குழுவும் உருவாகற வரைக்கும் இந்தக் கவிதை வரக் கூடாது…”
“ஏன் ஸார்? இலக்கியத்துக்கு குழு இல்லாம முடியாதா? ”
“அமைப்புகளை ஒட்டு மொத்தமா விமர்சிச்சிருக்கீங்க.. என் சிறு பத்திரிக்கையும் அதோட ஆசிரியர் குழுவும் கூட ஒரு அமைப்புத் தானே?”
“அமைப்புக்குள்ளே இருக்கிற கட்டுப்பாடுகளையும் அதே சமயம் அமைப்புகளே காலத்தோட கட்டாயமான அவசியங்கள் அப்படிங்கிற மாதிரி இரு பொருளும் இணைந்து வர்ற மாதிரி தானே எளுதி இருக்கேன்”
“உங்க ஆளுமை இதைச் சொல்லுற அளவுக்கு அங்கீகரிக்கப் பட்டிருக்கணும். வளந்தவங்க சர்ச்சைகள் மூலமா மேலும் தன்னை ஸ்திரப்படுத்திக்கலாம். ஆனா வளரும் முன்னாலே சர்ச்சைகளில மாட்டிக்கக் கூடாது..”
“சிறு பத்திரிக்கையில கூட சுதந்திரமா எளுத முடியாதா ஸார்?
“சர்ச்சைகளைச் சுமக்கும் போது அந்தப் பத்திரிக்கைக்கும் எதிர் வினையத் தாங்கிக்கிற கட்டாயம் வரும். அதுக்கான த்ராணி என் பத்திரிக்கையையும் சேத்து பல சிறு பத்திரிக்கைகளுக்குக் கிடையாது”
அவர் சொன்ன பதில் அவ்வளவு சமாதானமாகப் படவில்லை. என்றாலும் தன் மீது அவர் இதுவரை நிறையவே மரியாதையும் அக்கறையும் காட்டி இருக்கிறார். மூத்த எழுத்தாளராயிருந்தாலும் இவனைக் கத்துக்குட்டி போல நடத்தியதே கிடையாது.
பேச்சு திசைமாறி ப்ரேம்-ரமேஷ் “பின் நவீனத்துவ எழுத்து என்று எதுவும் கிடையாது. பின் நவீனத்துவ வாசிப்பு என்னும் அணுகு முறை வேண்டும்” என்பாதாகத் தான் புரிந்து கொண்ட கருத்தை அவன் கூறியதும் அவர் தமது அபிப்ராயத்தை சொல்ல ஆரம்பித்தார்.
பசி வயிற்றைக் கிள்ளிய போதுதான் மணி இரண்டடித்து விட்டது தெரிந்தது.
கிருட்டினனைப் பார்த்தாலே உணவு அவருக்கு அவ்வளவு அக்கறைக்குரிய விஷயமில்லை என்பது தெரியும். ஞாயிறு பகலில் அவர் வீட்டில் யாரேனும் தூங்க விரும்பினாலும் ‘சளசள’வென்று பேச்சு சத்தம் தொல்லையாக முடியக் கூடாது. மனைவியுடன் எங்கேயோ வெளியே போக வேண்டும் என்று சொல்லிக் கிளம்பினான்.
பஸ்ஸில் ஏறியதும் பைக்குள் கை விட்டால் பத்து ரூபாயும் சில்லறைகளுமே தென்பட்டன. போனவுடன் அவள் “கைமாத்தா வாங்கி வாரேன்னீங்களே, கிடச்சிதா?” என்பாள்.
இவர் தனக்கு பதில் சொன்னது போல் துல்லியமாய் விளக்கி பதில் சொல்ல முடியாது. அவள் அதை எதிர்பார்க்கவும் மாட்டாள்.
**__
**__**
**
லதாவின் ‘மொபைல்’ ஒலித்தது. “மேடம்.லேடீஸ் மேகஸைன் இன்டர்வியூவுக்காக உங்களைப் பாக்க சுந்தரின்னு ஒரு மேடம் வந்திருக்காங்க..”
“டூ மினிட்ஸ்.. கீழே வரேன்.”
சுந்தரி தன் வயதை ஒட்டியவளாகத் தோன்றினாள். சற்றே பதட்டமாக இருந்தாள்.
“வணக்கம்”
“ஐ ஆம் சுந்தரி”
“நைஸ் மீட்டிங் யூ… ‘பற்றாக்குறை’ ன்னு ஒரு ஸ்டோரி. எடிட்டர் என் கிட்ட கொடுத்துப் படிக்கச் சொன்னாரு. படிச்சேன். “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ” ன்னு ஒரு ‘ஸாங்’ பாடறதுக்கு ஒருத்தரை சஜ்ஜெஸ்ட் பண்ணச் சொன்னீங்களாம். நான் ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட். எனக்குப் பாட வரும்.’
“கொஞ்சம் மூச்சு விட்டுக்கறீங்களா? ” சூழலை சற்றே இளக்கும் விதமாகக் கேட்டாள் லதா.
“ஸாரி.. நீங்க ரொம்ப பிஸின்னு கேள்விப்பட்டிருக்கேன். அதான்.”
“நெவர் மைன்ட்.”
காபி வந்தது.
‘ப்ளிஸ்’ என்று அவளை அமர வைத்தாள் லதா.
“இன்டர்வ்யூவை ஆரம்பிக்கலாமா?”
“ப்ளீஸ்.. ப்ரொஸீட்..”
சுந்தரி தன் மொபைலில் ஒரு பொத்தானை அழுத்தினாள். ‘மொபைல்லேயே ரெகார்ட் பண்ணிக்கறேன் மேடம்’
‘ஓகே’
“நீங்க இந்த ப்ரொஃபெஷனுக்கு எப்படி வந்தீங்க?”
“நான் காலேஜ் முடிச்சி சும்மா இருந்தப்போ ஃபேமிலி ஃப்ரண்ட் ஒரு அங்கிள் என்னை ஒரு ‘எஃப் எம்’மில ரேடியோ ஜாக்கியா சேத்து விட்டாரு. ஒன்ஸ் மீடியா லைன்ல வந்தப்பறம் ஒவ்வொண்ணாக் கத்துக்கிட்டு இப்போ ஒரு ப்ரொட்யூஸரா இருக்கேன்”
“பர்ஸனலா ஒரு கேள்வி.. கேக்கலாமா..” தயங்கினாள் சுந்தரி.
“நோ ப்ராப்ஸ் .. கோ அஹெட்”
“நீங்க இப்போ ஸிங்கிளா இருக்கீங்க.. இது பத்தி உங்களுக்கு வருத்தம் ஏதும் உண்டா?”
“டூ யூ வான்ட் டு ஸெல் தி ஐடியா தட் பீயிங் ஸிங்க்ள் ஈஸ் பெயின் ஃபுல்?”
“நாட் எக்ஸாக்ட்லி…இந்த பாபுலர் வ்யூவை நீங்க ஏத்துக்கறீங்களா? அப்படி வேணுமின்னா மாத்திக்கிறேன்”
“நான் என்ன நினைக்கறேங்கறது லெட் இட் வெயிட். மேரீட் லயிஃப்ல பெயின் அதிகமா? ப்ளஷர் அதிகமா? சொல்லுங்க”
“இட் ஆல் டிபென்ட்ஸ்”
“யெஸ். இட் ஆல் டிபென்ட்ஸ் ஆன் வாட் யூ எக்ஸ்பெக்ட் ஃப்ரம் லைஃப். இன்னும் கரெக்டா சொல்லணுமின்னா ஒரு லேடி தனக்குன்னு ஒரு பர்ஸனல் லைஃப் இருக்கறதா நெனக்கறாளா அப்படிங்கறதைப் பொருத்தது.”
“மேடம் .. வாட் ஈஸ் பர்ஸனல் ஹாஸ் டிஃபரென்ட் மீனிங் இன் டிஃபரென்ட் பேக் க்ரவுண்ட்ஸ். இன் அர்பன் லைஃப் ஸ்டைல் ப்ரைவஸி ஹாஸ் அ ப்ளேஸ். இன் ரூரல் ஏரியாஸ் தேர் ஈஸ் நோ சான்ஸ் ஃபார் ப்ரைவஸி”
“சுந்தரி.. நான் சொல்றது நாட் ஒன்லி ப்ரைவஸி. ஐ மீன் அ மிஷன்… லைஃபுக்கான மிஷன் தன்னோட இம்மீடியட் ஃபேமிலி மட்டுந்தான்னு சொல்லிக்கிற ஜென்ட்ஸ் அன்ட் லேடீஸ் நைன்டி நைன் பர்ஸன்ட்.. பட் அந்த மாதிரி சொல்லிக்கிறவங்க தான் எலியும் பூனையுமா எதோ ஒரு காரணத்தினால ப்ரேக் ஆகாத மேரேஜ்ல டைய்டா இருக்காங்க. மிஷன் மட்டுமே மையமா ஒரு ஆணும் பெண்ணும் யுனைட் ஆக முடியும். ஃபார் ஆன் எக்ஸாம்பில் லெட் அஸ் டேக் க்யூரி கப்பிள்..”
“ரேடியம் கண்டுபிடிச்சாங்களே…”
“யா ஐ மீன் தெம் ஒன்லி. அவங்க ரெண்டு பேரோட பர்ஸனல் லைஃப் ஆர் மிஷ்ஷன் ஒண்ணா அமைஞ்சிது. அந்த மாதிரி அனேகமா யாருக்குமே இல்லை. அப்போ தன்னோட மிஷ்ஷனை விட்டுடுறது ஸெல்ஃப் இன்ஜஸ்டிஸ். ஐ ஆம் நாட் ஃபார் இட்”
“மேடம் இஃப் யூ டோன்ட் மிஸ்டேக். மதர்ஹுட்ங்கறது ரொம்ப உசத்தி இல்லியா?”
லதா சிரிக்கத் தொடங்கினாள். “சுந்தரி.. மதர்ஹுட் உசத்திதான். ஆனா அது வாழ்க்கையோட ஒரு ஸ்டேஜ். ஒரு பார்ட். அதுக்காக என் வாழ்க்கையையே பணயம் வெக்கறேன்னு சொல்ல முடியுமா?”
“மேடம்.. நீங்க சொல்ற மிஷ்ஷன் முடிஞ்சப்புறம்.. ஒரு வேகூம் வராதா?”
“மே பீ. பட் இப்போ ஃபேமிலி ஸொஸ்ஸையிட்டி.. எனி ரிலேஷன்ஷிப்.. அதுல வேகூம் இல்லாம இருக்கா? ”
“மேடம். ஐ ஆம் நாட் ஏபில் டு கெட் யூ”
“ஓகே. லெட் மீ புட் இட் டிஃப்ரென்ட்லி.. ஒருத்தர் தன் கிட்டேயிருந்து தானே எக்ஸ்பெக்ட் பண்ற அசீவ்மென்ட்ஸ் சிலது இருக்கு. மலைக்கி மேலே போகப் போக சிரமமா இருக்கும். முனைஞ்சி மேல போகறது ஒருத்தரோட நிச்சயமான அல்லது திடமான முடிவைப் பொறுத்தது. வேக்கூம் பத்தியெல்லாம் யோசிச்சித் தொடங்க முடியாது.”
“மேடம். ஸ்டில் மேன் ஆர் உமன் தேர் ஈஸ் டிபென்டன்ஸ் ஆன் ஈச் அதர். அப்படி இருக்கும் போது ஸிங்கிளா இருக்கறதில ஸ்டிரெஸ் இருக்காதா?”
“தேர் ஆர் டூ ஆஸ்பெக்ட்ஸ் இன் திஸ் டிபென்டன்ஸ். ஒன் ஈஸ் ஃபிஸிகல். அன்ட் அதர் எமோஷனல். இந்த ரெண்டுக்காகவும் லைஃபையே பணயம் வெக்கறது டூ மச்” . அதற்குள் லதாவின் மொபைல் போன் ஒலித்தது. ‘ஐ வில் கால் யூ இன் ஃபைவ் மினிட்ஸ்”.. சுந்தரியைப் பார்த்து “ஐ திங்க் வீ மே ஹேவ் டு வைன்ட் அப் அட் திஸ் ஸ்டேஜ்” என்றாள்.
“மேடம். ஆக்ச்டுவல்லி வீ வேர் ஜஸ்ட் கெட்டிங் வாமர்.’
“ட்ரூ. பட் இதெல்லாமே என்ட்லெஸ் டாபிக்ஸ். ஒரு ஐடியா தோணுது. ஃபர்தர் க்வெஸின்ஸ உங்க ரீடர்ஸ் கேக்கட்டுமே. ஐ வில் ரிப்ளை”
“குட் ஐடியா மேடம். நான் எடிட்டர் கிட்டே சொல்றேன். தேங்க்யூ வெரி மச்.”
“வெல்கம்”
**__
**__**
** காற்றில் ராஜேந்திரனின் வலது கை விரல்கள் இடைவெளிகளுடன் கர்நாடக சங்கீதத்தில் தாளம் போடுவர் விரல்கள் போல ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.
உறைவிடம் இலக்கா
இல்லை உறைவிடம் தேடல்
இலக்கா
ஊரும் எறும்புக்கு?
உலாவலை வெளிப்படையாய்
உறைவிடத்தை மறைவாய்
ஒழுங்கு செய்ய மட்டுமே
அது அறியும்
வரிசையாய்ச் சென்றவர்
யாரும்
நினைவு கூறத் தக்க
எதையும் எட்டவில்லை
என்று அறியாது
மண்புழுவுக்கு
தூண்டிலில் இரையாகத்
தொங்க நேர்வதில்லை
என்பதையும்
ஒளியிலும் இருளிலும்
ஊரும் ஆற்றலின்
பெருமிதத்தில்
எறும்புகள்
தவளையின் பெருமை
இதனிலும்
மிக்கது
என்று உணரா