கட்புலனாகாவிட்டால் என்ன?
சத்யானந்தன்
நான் பறித்த பூக்கள்
என் கண்படும் மலர்கள்
ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில்
பூத்து உதிர்ந்தன அல்லது
வாடின
பிரியா விடை அளித்து
பின் சந்திகாமலே
போனவர்கள் ஒரு
வெட்டுப் புள்ளியைக்
கடந்தனர்
மலையெங்கும்
மேகங்கள் இளைப்பாறி
ஈரமாக்கும்
கலையும் மீண்டு கவியும்
நேரங்களில் ஏதோ ஒரு
லயம்
முதலில் மறுதலித்தவள்
மௌனித்த பின் ஓர் நாள்
என் சகலமும் உனக்கே
என்றுவந்தளித்த பரிமாணத்தில்
முற்பிறவிச் சரடு
சுருதி மாறாமல்
அடுத்த நாள் என்னும்
புதிய வண்ண
ஆடையில் கால தேவதை
கவனத்தைக் கலைக்கிறாள்
பொம்மலாட்டக்கயிற்றின்
எந்த முனையில் அவள்
எல்லா நகர்வுகளின்
தடங்கள்
பின் அவை ஒன்றை ஒன்று
தொட்டும் இடை மறிக்காமல்
வெட்டிக் கொண்ட புள்ளிகள்
பாவின் நூல்களாய்
பூக்கள் மேகம் பிறவிகள்
காலம் இயங்குபடும்
சரடுகள் கட்புலனாகா
படைப்பின் கண்ணிகளாகும்
(image courtesy: holidayiq.com)
(24.1.2016 திண்ணை இதழில் வெளியானது)