நூல் மதிப்புரை
ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’
சீன வரலாறு, பண்பாடு, பெண்கள் மற்றும் சமகால வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதலை அளிக்கும் நூல் ‘பறந்து மறையும் கடல் நாகம்’. பல்லாண்டு உழைப்பு, ஆராய்ச்சியில் ஜெயந்தி சங்கர் படைத்திருக்கும் கட்டுரைகள் இவை.
நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, ‘ச்சிங் மிங்’ ‘கனவிலே ஒரு சிங்கம்’, ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’, ‘கூட்டுக்குள் அலையும் தெனீக்கூட்டம்’ ஆகிய 5 நூல்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பு ‘பறந்து மறையும் கடல்நாகம்’
மூன்று பெரிய பகுதிகளில் நாம் சீனாவை இந்த நூலில் புரிந்து கொள்கிறோம்:
- பறந்து மறையும் கடல் நாகம் (பொதுக்கலாசாரக் கட்டுரைகள்)
2.பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்ணின் வாழ்வும் வரலாறும்)
3.கூட்டுக்குள் அலையும் தேனீக் கூட்டம் (சீனாவின் உள்நாட்டு இடப் பெயர்வுகள்)
ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்டு 15 ஆண்டுகாலம் பல்வேறு கட்டுரைகளில் வழி உருவானது இந்த நூல். நூலாசிரியர் இதை ஏன் அவசியம் என்று கருதினார்? இவ்வளவு கடுமையான உழைப்பில் இந்த நூல் ஏன் உருவாக வேண்டும்? ஏன் வாசிக்கப்பட வேண்டும்? சீனப் பண்பாடு மட்டுமல்ல வேறு எந்த நாட்டின் அல்லது இனங்களின் பண்பாடு பற்றிய புரிதல் நமக்கு ஏன் தேவை?
மானுடவியல் தொடர்பாக நமக்கு மனத் தடைகள் இருக்கின்றன. அதாவது பிற பண்பாடுகளைப் புரிந்து கொள்ள செய்யப்படும் குறைவான ஆய்வுகள் கூட எந்த அளவு அது நமது பண்பாட்டுடன் பொருந்துகிறது அல்லது இரு பண்பாடுகளின் ஒற்றுமைகள் என்ன என்னும் எளிய ஆர்வத்துடன் நின்று விடுகின்றன.
இந்த நூலின் முதல் பகுதி சுவையான பல சீன நம்பிக்கை, வாழ்க்கை முறை பற்றியது என்றே மேலோட்டமாகத் தென்படக்கூடும். அதை நாம் எப்படிக் கடந்து நூலைப் புரிந்து கொள்கிறோம். அதன் மையச் சரடு என்ன?
கன்ஃப்யூஷியஸின் தத்துவப் புரிதல் சீனத்தின் ஆகத் தொன்மையானது. கிமு 6ஆம் நூற்றாண்டு கன்பூஷியஸ் என்னும் மத குருவின் காலம். பெரிதும் அவரது தத்துவம் ஒழுக்க நெறிகளையும் ஆண் மையமான சமுதாயத் தையுமே முன் வைத்தது.
சீனத்தின் மதங்களில் தாவோயிஸம் என்பது இரண்டாவதாகத் தொன்மையானது. யிங் என்னும் ஆண் சக்தி அதாவது ஆற்றலை முன்னெடுத்துச் செல்வதானது மற்றும் யாங் என்னும் பெண் சக்தி நிலையானவற்றை முன் நிறுத்தும் பொறுமையின் வடிவம் என்னும் அடிப்படையில் அதன் தத்துவம் அமையும். கிமு மூன்றாம் நூற்றாண்டு அதன் தொடக்க காலம். டிராகன் பற்றிய நம்பிக்கை மிகவும் தொன்மமானது. கடல் நாகம் என நாம் அழைக்கிறோம். ஆண் டிராகனுக்கு நீண்ட வாலுள்ளது. பெண் டிராகனுக்கு நெருப்பு வாலும் பறவை வடிவமும் உண்டு.
5ஆம் நூற்றாண்டு முதலே பௌத்தம் சீன வழிபாட்டில் இருந்தது. கிபி 7, 8ஆம் நூற்றாண்டில் பட்டுச் சாலை என் அழைக்கப்படும் வழியே வந்த பௌத் தத் துறவிகள் சீனத் தில் அதை ஊன்றினர். ஜென் மகாயாணத் தின் வழி முறை. அது 12ஆம் நூற்றாண்டுக்குப் பின் சீனத் தில் தேய்ந்து ஜப்பானில் நிலை கொண்டது.
குஆயின்யின் என்னும் பெண் தெய்வம் சீனத்தில் பெரிதும் வழிபடப் படுகிறார். அவருக்குப் பல வடிவங்கள். அவலோகிதேஸ்வரா என்னும் ஆண் தெய்வ வடிவமும் உண்டு. போதி சத்துவர் தெய்வம், ஆசானாக வழிபடப் படுகிறார்.
பலவிதமான நம்பிக்கைகள் இன்னும் வேரூன்றியவை. ஒருவரின் வயதை தாயின் வயிற்றில் கருக் கொண்ட காலம் முதலே கணக்கிடுகிறார்கள். வருடங்களில் 60 ஆண்டுச் சக்கரம் இந்தியா போன்று இருந்தாலும் மகாமகம் போல 12 ஆண்டுகளுக்கு ஒரு கால அளவு உண்டு. யாங்சே என்னும் ஆற்றை ஒட்டி தொங்கும் கல் லறைகளை நிறுவும் பாரம்பரியம் இருந்தது.
மஞ்சள் ஆறு மிகவும் நீண்டது. அதை ஒட்டி வளர்ந்த பண்பாடு, அதனால் வளர்ந்த விவசாயம் என சீன வாழ்க்கையில் அந்த ஆற்றுக்கு முக்கிய இடமுண்டு. ஒவ்வொரு வருடமும் புது வருடக் கொண்டாட்டத்தில் வெடிக்கப் படும் பட்டாசுகள் நியான் என்னும் விலங்கிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் என நம்புகிறார்கள்.
நீத்தார் நினைவான திதி தினத்தில் அவருக்கு உணவு படைப்பதைத் தவிர பணம் போன்று அச்சடிக்கப்பட்ட காகிதங்களையும் எரிக்கிறார்கள்.
மிகவும் ஆச்சரியமளிக்கும் நம்பிக்கை டுஜிய இனத்தவர் மரண வீட்டில் ஒப்பாரியும் கல்யாண வீட்டில் கொண்டாட்டமும் உண்டு.
கட்டமைப்பில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே சீனா வலுவாயிருந்தது. திபெத் வரை இருந்த நெடுஞ்சாலை தேயிலைச் சாலை என்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரை நீண்ட சாலை பட்டுச் சாலை என்றும் அறியப் பட்டன.
ஓரினச் சேர்க்கை பற்றிய பதிவுகள் வரலாற்றில் இருப்பது வியப்பளிப்பது. ஆண் குழந்தைகள் வெவ்வேறு பருவங்களில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு அந்தப் புரங்களில் அடிமைகளாகப் பணி அமர்த்தப் பட்டனர். இவர்களில் பலர் அரச குடும்பத்தை போதைக்கு அடிமையாக்கி மிகவும் வலுவான நிலைக்குத் தம்மை உயர்த்திக் கொண்ட கதைகள் உண்டு. 5000 ஆண்டுகளுக்கு முன்பே தேனீர் சீனத்தில் அருந்தப்பட்டது. தேனீர் விருந்து பாரம்பரியமானது. பட்டங்களுக்கு சீனப் பண்பாட்டில் முக்கிய இடமுண்டு. ராணுவத்தின் செய்திப் பரிமாற்றத் துக்குப் பயன்பட்டது. 19, 20 நூற்றாண்டுகளில் ஆளே பயணம் செய்த பட்டங்கள் உண்டு என்னும் வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.
சீனத்தில் ஒரு நூற்றாண்டு முன் வரை மன்னர்கள், குறுநில மன்னர்கள், மத் திய ஆட்சி, வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு ஆட்சிகள் , ராணுவ ஆட்சி எனப் பலவிதமான அதிகார மாற்றங்கள் இருந்தன. கம்யூனிஸ ஆட்சி நிலைத் து 75 வருடங்களே ஆகின்றன.
இந்த நூலின் முதல் பகுதி சுவையான பல சீன நம்பிக்கை மற்றும் வாழ்க்கை முறை பற்றியது என்றே மேலோட்டமாகத் தென்படும். அதை நாம் எப்படிக் கடந்து நூலைப் புரிந்து கொள்கிறோம். ‘அதன் மையச் சரடு என்ன?’ என்னும் கேள்விக்கான விடை; மக்கள் ஆட்சி மாற்றங்கள் அதிகாரம் மாறும் முன் நிகழ்ந்த போர்கள் இவற்றைத் தாண்டி தமது பண்பாட்டை, உழைப்பும் திறனும் நிறைந் த பொருளாதாரத் தை, நூற்றாண்டுகளாயிருக்கும் நம்பிக்கைகளைப் பேணி இருக்கிறார்கள். மௌனமாக அவர்கள் பேராற்றலும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையையும் இவ்விதமாக வெளிப்படு த் தி இருக்கிறார்கள்.
உலகப் பண்பாடுகளில் பெண்களுக்கு எதிராக நடத்தப் பட்ட மிகப் பெரிய ஒடுக்கு முறையும் வன்முறையும் சீனத்திலும் நிகழ்ந்ததற்கான ஆதாரம் சீனப் பெண்கள் பற்றிய விரிவான பதிவாக அமைந்துள்ள நூலின் இரண்டாவது பகுதியில் கிடைக்கிறது. ஆறாம், ஏழாம் நூற்றாண்டின் டாங் பரம்பரை ஆட்சி மட்டுமே பெண்களுக்கான பொற்காலமாயிருந்தது. மற்ற எல்லாக் காலங்களிலும் பெண்கள் இழிவு படுத்தப்பட்டனர். சிறுமிகள் பதின் வயது முதல் பாதங்கள் அவர்களது பாதங்கள் மூங்கில் துண்டுகள் வைத்துக் கட்டப்பட்டதால் ஊனமுற்றவர்களாய் கால்களில் புண்களுடன் நடக்கக் கட்டாயப் படுத்தப்பட்டவர்களாய் ஆகினர். வென்னீர் விட்டு பாதம் இளக்கப்பட்டு பச்சிலைகளால் வலுவற்றதாக்கப்பட்டு சிறிய அளவிலான பாதம் வர வேண்டுமென்று கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆணை அண்டி இருக்க வேண்டும். ஆணை விட்டு எங்கும் ஓடி விடக் கூடாது என்று அவ்வாறு முடப்படுத்தப்பட்டனர். 1911ல் தான் இந்த வழக்கம் அரசால் தடை செய்யப் பட்டது. பெண் குழந்தைகளுக்கு உடைந்த பொம்மைகளும் அவளது சகோதரனுக்கு நல்ல பொம்மைகளும் தரப்படுவது சீனத்தில் சர்வ சாதாரணம்.
பெண்களில் நிலை பற்றி நாம் அறிந்து கொள்ள சீன உயர்நீதி மன்ற நாளிதழில் ஜுலை 1890ல் நான்கு பகுதிகளாக வெளிவந்த கட்டுரைகள் முக்கியமான ஆவணங்களாகும். கன்பூஷியஸின் ஏழு பாவங்கள் என்று இவை பட்டியலிடப்படுகின்றன: கல்வி மறுப்பு, பெண்கள் விற்கப்படுவது, பெண் சிசுக் கொலை, பலதார மணம், பெண்களின் தற்கொலைகள் மற்றும் மக்கட் தொகை அதிகரிப்பு. மிகவும் வருத்தப் பட வேண்டிய விஷயம் கன்ஃப்யூஷியஸ் வழிமுறையை பா வடிவில் இயற்றிய பான் ஜாவ் என்பவர் பெண். அவர் பெண்ணடிமை செய்யப்படுவதை ஆதரித்தே அறநூல்களாக எழுதினார். முதன் முதலில் பெண்களுக்கான ஆதரவுக் குரலாக உரிமைக் குரலாக ஒலித்தது க்யூ ஜின் 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரசுக்கு எதிராகவும் பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்ததற்காகத் தூக்கிலிடப்பட்டார்.
பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வளப்படுத்திய நூஷு என்னும் மொழி பற்றி நாம் இந்தப் பகுதியில் புரிதல் கொள்கிறோம். குறிச் சொற்கள் வாயிலாக ஆண்களுக்குத் தெரியாமலேயே பெண்களால் பயன்படுத்தப் பட்டு கவிதை எழுதுமளவு வளப்பட்டது நூஷீ மொழி. 1966ல் நடத்தப் பட்ட கலாசாரப் புரட்சியின் போது பலியான பலவற்றில் இந்த மொழியின் படைப்புக்கள் ஆதாரங்களும் அடங்கும். சமீப காலத்தில் அரசு இதன் ஆதாரங்கள் மற்றும் பிரதிகளைப் பேண முயற்சி எடுத்து வருகிறது.
இன்றைய சீனப் பெண் தன் பாரம்பரிய அடிமைத் தளையை மீறி வெற்றிகளை நோக்கி விரையும் ஓய்வில்லா உழைப்பாளியாகத் தென்படுகிறாள்.
‘அலையும் தேனீக் கூட்டம் ’ என்ற மூன்றாவது பகுதியில் சீனர்கள் உள்நாட்டுக்குள் இடம் பெயரும் பின்னணியும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் விரிவாக நமக்குக் கிடைக்கின்றன. சீனப் புத்தாண்டின்போது பண்டிகைக்காக ஊருக்குப் போவதில் தொடங்கி, கல்வி, வேலை, வருவாய் ஆகிய காரணங்களுக்காக இடப்பெயர்வு தொடர்கிறது. 1966 ல் ஒரு கோடி இளைஞர்கள் நகரத்தில் இருந்து கிராமங்களுக்கு கட்டாயக் குடியமர்த்தலில் அனுப்பப் பட்டார்கள். இன்று சீன நகரங்கள் கிராமங்கள் இரண்டும் வாய்ப்புக்களில் பெரிய இடைவெளியுள்ளவை. ஹூகோவ் எனப்படும் ஊர் அடிப்படையிலான குடியுரிமை மட்டுமே ஓர் ஊரில் படிக்க வேலையில் முன்னுரிமை பெறத் தேவையானது. திறன்மிகுந்த தொழிலாளிகள் இடம் பெயர்வதில் இது சிக்கலை ஏற்படுத்துகிறது. கம்யூனிஸ நாடுகளில் உள்ள ஊடகத்தின் மீடான தடைகளால் சீனத்தொழிலாளிகளின் உண்மை நிலை வெளிவருவதில்லை.
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளில் உருவானது 2300 கிமி நீளமுள்ள சீனப் பெருஞ்சுவர். இதன் பல பகுதிகள் பராமரிப்பின்றிப் பாதுகாப்பின்றி உடைபட்டன. அரசே சுமார் 80 கிமி தூரத்தை மட்டும் சுற்றுலாத் தலமாகப் பேணப்படுகிறது. சீனப் பண்பாட்டின் நிலையை இது குறீயீடாகக் காட்டுவதாகவே நாம் காண்கிறோம். மானுடம் விழித்தெழும் காலம் தானாக நிகழ்வதில்லை என்னும் புரிதலை ஜெயந்தி சங்கரின் கடுமையான உழைப்பில் உருவான இந்நூலால் அடைகிறோம்.
(தீராநதி பிப்ரவரி 2016 இதழில் வெளியானது)